ராஞ்சி:
உலகம் முழுவதும், கொரோனாவைரஸ் மாபெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, சாதியப் பாகுபாடும், தீண்டாமை ஒடுக்குமுறையும்தான் கொரோனாவைக் காட்டிலும் கொடிய வைரஸாக இருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்திருக்கும் சம்பவம் அதனை மீண்டும் நிரூபித்துள்ளது.இங்குள்ள ஹசாரிபாக் மாவட்டம், பிஷ்ணுகார் தொகுதிக்கு உட்பட்டது, பனாசோ தனிமைப்படுத்தல் மையம். பார்வார் இட்கா பள்ளியில் அமைக் கப்பட்டிருந்த இந்த மையத்தில், கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அங்கேயேஅவர்களுக்கு மருத்துவசிகிச்சைகள் அளிக்கப்பட்டதுடன், உணவும் சமைத்து வழங் கப்பட்டு வந்தது.
இந்நிலையில், முகாமில் இருந்த 5 பிராமணர்கள் மட்டும்,“தலித் வகுப்பினர் சமைத்த உணவை நாங்கள் சாப்பிடமாட்டோம்” என்று கூறி, சாதியப்பாகுபாட்டைக் கடைப்பிடித்துள் ளனர். அதிகாரிகள் எவ்வளவோ சொல்லியும், அவர்கள் தங்களின் முடிவை மாற்றிக் கொள்ளாமல் விடாப்பிடியாக இருந்துள்ளனர்.இதனால் வேறுவழியின்றி அந்த 5 பிராமணர்களுக்கும் உரியஉணவுப் பொருட்களை வழங்கி,அவர்களுக்கு தனியாக சமைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.இந்த சம்பவம் தற்போது வெளியே தெரியவந்த நிலையில்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நடந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள ஹராசிபாக் துணை ஆணையர் புவனேஷ் பிரதாப் சிங், “5 பிராமணர்களும் இப்படி ஒரு பிரச்சனையை எழுப்பியிருக்கக் கூடாது. வைரஸ்பரவல் அதிகரித்து வரும் நிலையில், சாதி, மதத்திற்கு மதிப்பளித்திருக்கக் கூடாது” என்று வேதனை தெரிவித்துள்ளார்.